மூன்றாம் பத்து

முதல்திருமொழி - தன்னேராயிரம்

(யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)


எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

223 தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே.
அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 1

224 பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2

225 கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3

226 மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4

227 முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5

228 கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே.
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6

229 மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி.
பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7

230 வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன்
காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8

231 தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9

232 தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10

233 கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11


இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை

(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)

கலிநிலைத்துறை

234 அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 1

235 பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2

236 நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3

237 வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4

238 அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5

239 மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6

240 வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7

241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8

242 குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9

243 என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. 10


மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை

(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

244 சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. 1

245 கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2

246 காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்
சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3

247 கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே.
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4

248 பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே.
எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே.
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5

249 அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6

250 பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7

251 கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8

252 திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9

253 புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. 10

நான்காம் திருமொழி - தழைகளும்

(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

254 தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே.
1

255 வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப்
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே.
2

256 சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே.
3

257 குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி. வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே.
4

258 சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே.
5

259 சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப்
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ.
6

260 சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிரக்
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே.
7

261 சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே.
8

262 வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.
9

263 விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
10


ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி

(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

264 அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
1

265 வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
2

266 அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரைப்
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
3

267 கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
4

268 வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்
அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
5

269 செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
6

270 படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
7

271 சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
8

272 வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
9

273 கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
10

274 அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த்
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
11


ஆறாம் திருமொழி - நாவலம்

(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

275 நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே.
1

276 இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே.
2

277 வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழச்
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே.
3

278 தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவிக்
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே.
4

279 முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.
5

280 செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.
6

281 புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே.
7

282 சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக்
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.
8

283 திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.
9

284 கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே.
10

285 குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகிச்
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே.
11


ஏழாம் திருமொழி - ஐயபுழுதி

(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

286 ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. 1

287 வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2

288 பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3

289 ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4

290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5

291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6

292 பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7

293 காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8

294 கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9

295 பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10

296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. 11

எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை

(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

297 நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? 1

298 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2

299 குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3

300 ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4

301 தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5

302 வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ?
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6

303 அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ?
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7

304 குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ.
நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8

305 வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ?
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9

306 மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. 10


ஒன்பதாம் திருமொழி - என்னாதன்

(க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)

கலித்தாழிசை

307 என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. 1

308 என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற. 2

309 உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3

310 மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற. 4

311 பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5

312 முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6

313 காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7

314 தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8

315 மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9

316 காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10

தரவு கொச்சகக்கலிப்பா

317 நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. 11


பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

(இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு,
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக்
கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்

கலிவிருத்தம்

318 நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். 1

319 அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே.
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2

320 கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3

321 வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4

322 மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5

323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6

324 மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7

325 மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8

326 திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. 9

327 வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. 10