திருப்பல்லாண்டு ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்


நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக|
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
(இருவிகற்ப நேரிசை வெண்பா)


மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

---------

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு

காப்பு
குறள்வெண்செந்துறை

1.பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு 1

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

2.அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. 2

3.வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3

4.ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4

5.அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5

6.எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

7.தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7

8.நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8

9.உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

10.எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10

11.அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே. 11

12.பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. 12


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.