ஐந்தாம் பத்து

முதல் திருமொழி - வாக்குத்தூய்மை

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

433 வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா. கருளக்கொடியானே.
1

434 சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே.
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே.
2

435 நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா. என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா. என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
3

436 நெடுமையால்உலகேழுமளந்தாய்.
நின்மலா. நெடியாய். அடியேனைக்
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே.
4

437 தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே.
5

438 கண்ணா. நான்முகனைப்படைத்தானே.
காரணா. கரியாய். அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
6

439 வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
7

440 வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே. மதுசூதா.
கண்ணனே. கரிகோள்விடுத்தானே.
காரணா. களிறட்டபிரானே.
எண்ணுவாரிடரைக்களைவானே.
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே.
8

441 நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்
நாதனே. நரசிங்கமதானாய்.
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா. கடலைக்கடைந்தானே.
எம்பிரான். என்னையாளுடைத்தேனே.
ஏழையேனிடரைக்களையாயே.
9

442 காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
10


இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை

(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

443 நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. 1

444 சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2

445 வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப்
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3

446 மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4

447 மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5

448 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6

449 கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7

450 ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8

451 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.
அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே.
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்.
பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 9

452 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. 10


மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை

(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 1

454 வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2

455 உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். 3

456 காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4

457 காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5

458 எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத்
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6

459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7

460 எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8

461 அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9

462 சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. 10


நாலாம் திருமொழி - சென்னியோங்கு

(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு
தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? 1

464 பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2

465 எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்?
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3

466 கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4

467 பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5

468 உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ.
என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6

469 பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7

470 அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8

471 பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. 9

472 தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. 10

473 வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. 11


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.